மோகன்ராஜாவின் "வேலைக்காரன்" திரைப்படம் அவரது முந்தைய மாபெரும் வெற்றிப்படமான "தனிஒருவன்" காரணமாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியாகியிருக்கிறது. சமூகத்தின் மீதான அக்கறையை இந்த படத்திலும் மோகன் ராஜா அவர்கள் படம் முழுவதும் காட்டியிருக்கிறார். மிகவும் பேசப்பட வேண்டிய, ஆனால் யாரும் பேசாத களத்தை, சிவகார்த்திகேயன், நயன்தாரா, பாகத் பாசில், ஸ்னேகா, பிரகாஷ்ராஜ், RJ பாலாஜி எனும் நடிகர் பட்டாளம் கொண்டு சொல்லியிருக்கிறார்.
படத்தின் ஹீரோ கதைக்களம் தான். உணவே விஷமாகிப் போன இன்றைய அவசர உலகில் உணவு சார்ந்த வியாபாரம் செய்யும் பெரும் நிறுவனங்களின் தகிடுதத்தங்களை தோலுரிக்கும் படம் தான் இந்த "வேலைக்காரன்". இப்படியொரு கதைக்களம் பிடித்த மோகன் ராஜா "தனி ஒருவனுக்கு" பிறகு என்னுடையப் படம் என்று பெருமையோடு சொல்லிக் கொள்ள தகுந்த படமிது. "தனி ஒருவன்" படத்திற்கு அவருடைய உழைப்பிற்கு கிடைத்த வெற்றியும், பாராட்டுகளும் அவருக்குள் மிகவும் ஜாக்கிரதை உணர்வையும் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது. அந்த பொறுப்பு இந்த படத்தில் நன்றாகவே தெரிகிறது.
வேலைக்காரன் திரைப்படம் சிவாவின் திரைவாழ்க்கையில் நிச்சயம் மிக முக்கியமான திரைப்படம் தான். வெறும் காமெடி, நடனம், காதல் என்று நேரத்தை சாதாரணமாக கடத்திச் சென்று விடும் கதாபாத்திரம் அல்ல இந்த படத்தின் "அறிவு". தான் பிறந்து, வளர்ந்த குப்பமும், குப்பத்து ஜனங்களும் உயர வேண்டும் என நினைக்கும் நல்ல இளைஞன். குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என நினைக்கும் பொறுப்பான மகன். உணவு எனும் பெயரில் விஷம் உண்ணும் மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் சிறந்த குடிமகன். ரஜினி, விஜய் பாணி படங்கள் சிவாவிற்கு சிறப்பான, செழிப்பான வசூலை கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில் படத்துக்கு படம் தன்னை மெருகேற்ற வேண்டுமென நினைக்கும் சிவா பாராட்டப்பட வேண்டியவர்.
சரி. இத்தனை சிறந்த கதைக்களத்தை கொண்ட படம் முடிவில் முழு திருப்தி கொடுத்ததா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டியிருக்கிறது. இதோ எனக்கு முழு திருப்தி கிடைக்காமல் போனதற்கான காரணங்களாக நான் நினைப்பவை:
1) கொஞ்சமும் இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்வதைப் போல் வந்து கொண்டே இருக்கும் வசனங்கள். ஒன்றை வாங்கி நன்றாக கிரகிப்பதற்குள் அடுத்த வசனம் என பேசி பேசியே நம்மை டயர்ட்டாக்குகிறார்கள்.
2) சரியாக பொருந்தாமல் துருத்திக் கொண்டு தெரியும் எடிட்டிங். சில காட்சிகள் படக்கென முடிந்து அடுத்த காட்சி ஆரம்பிக்கிறது. இதனை உன்னிப்பாக கவனித்துக் குறையாக சொல்லவில்லை. சாதாரணமாகவே தெரிகிறது.
3) லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை சரியாக உபயோகிக்காமல் வீணாக்கியது. குறிப்பாக சிவா-நயன் கெமிஸ்ட்ரி சுத்தமாக ஒட்டவில்லை. சிவாவும் ஏதோ ஸ்கூல் டீச்சரைப் பார்த்து ஒதுங்கி நிற்பது போல் ஒரு வித தயக்கத்துடனே நயனை அணுகுகிறார்.
4) காமெடி காட்சிகளில் புகுந்து விளையாடும் சிவா, சீரியசான சில காட்சிகளில் சிறப்பாக நடிக்க முயன்று தோற்றிருக்கிறார்.
மொத்தத்தில் "தனி ஒருவனில்" மோகன் ராஜா நிகழ்த்திய மேஜிக் "வேலைக்காரனில்" கொஞ்சம் மிஸ்ஸிங்.

Comments
Post a Comment